menu

Sunday, 24 March 2013

பஞ்சதந்திர கதைகள் - நன்றி ஓடுகளே!

ஒரு காட்டில் ஆமையும் , நத்தையும் நண்பர்களாய் இருந்தன . அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக , ஒரு மனக்குறை இருந்தது . தங்களால் வேகமாக நடக்கவோ , தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது . ஒருநாள் , அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது , ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து , ஓடி வருதைக் கண்டன . " முயலே நில் ! '' என்றது ஆமை . முயல் நின்றது . " நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய் ? '' என்று கேட்டது நத்தை . " இது என்ன கேள்வி ! உங்களுக்கு இருப்பதுபோல் , என் முதுகில் கனமான ஓடு இல்லை . அந்தச் சுமை இல்லாததால் , வேகமாக ஓடுகிறேன் ! '' என்று சொல்லி விட்டு , முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது . " ஓஹோ ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா ? '' " ஆமாம் ! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால் , என்னைப் போல் வேகமாக ஓடலாம் . வேகமாக ஓடுவதில் , ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா ... அனுபவித்துப் பாருங்கள் ! '' என்றது முயல் . ஆமைக்கும் , நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது . அவற்றைக் கழற்ற முயன்றபோது , திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது . ஆமையும் , நத்தையும் ஆபத்தை உணர்ந்து , தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன . சட்டென , புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு , முயலை நோக்கிப் பாய்ந்தது . ஆமையும் , நத்தையும் , விருட் டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு , உயிர் பிழைத்தன . ஓநாய் முயலைப் பிடித்தது . சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும் , நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து , உறைந்து போயின . தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட , உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன . தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின

No comments:

Post a Comment