ஓரிடத்தில் இருந்த எலி , முயல் , குரங்கு , வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன . ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும் . ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும் . முயல் மட்டும் மவுனமாக இருக்கும் . “ நம் நால்வரில் நான் தான் மிக அழகு ! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள் !'' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு . “ நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம் ! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது . எனவே நான்தான் அழகு தேவதை !'' என்றது எலி . “ மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம் , எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள் ! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன் !'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி . “ நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை !'' முயல் சொல்ல , மூன்றும் சேர்ந்து சிரித்தன . முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது . “ என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான் !'' குரங்கு சொல்லியது . “ ஆமாம் ... ஆமாம் ...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி . “ நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா ? அறிவு , புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும் . அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும் '' என்றது எலி . “ எனக்கொரு யோசனை தோன்றுகிறது ! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன ?'' கேட்டது வெட்டுக்கிளி . “ போட்டி நடத்தலாம் . ஆனால் நடுவர் யார் ?'' சந்தேகம் எழுப்பியது எலி . “ நடுவராக நானிருக்கிறேன் !'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது . அனைத்தும் மேலே பார்க்க , மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது . “ நீங்கள் எப்படி ?'' ஆச் சரியப்பட்டது குரங்கு . “ நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன் . முயலை யும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள் . ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் !'' என்று காகம் தன் முகவரி கூறியது . “ அப்படியே செய்கிறோம் ..'' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன . மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன . அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது . அதன் கால்களில் காயம் தெரிந்தது . “ எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன் . ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான் !'' குருவி பல கீனமாக உதவி கேட்டது . “ நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம் . அபசகுனமாக பேசாதே !'' கடுமையாக கூறியது குரங்கு . குருவியைப் பார்த்த எலியும் , வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன . முயல் குருவி அருகே தயங்கி நின்றது . பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது . அழகிப் போட்டி தொடங்கியது . குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை . மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின . “ அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன் . இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன் ! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன் !'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன . அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது . “ முயல்தான் அழகு ராணி ! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன் ! குருவி என் நண்பன்தான் ! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது . அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது ! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள் !'' காகம் கூறியதும் எலி , வெட்டுக்கிளி , குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின . கதை சொல்லும் நீதி !
: நம் யார்க்கவது உதவி செய்தால் அது ஒருநாள் நமக்குஎதிர்பாரத பயனைத்தரும்.
No comments:
Post a Comment